கர்நாடகாவில் நடந்து வரும் அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வது பாஜகதான் என்று கூறி இதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் அரசியல் அரங்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென பா.ஜனதா பக்கம் சாய்ந்துள்ளனர். இப்படி மாநிலத்திற்கு மாநிலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜவினர் தங்கள் கட்சிக்கு இழுப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகா- கோவா மாநிலங்களில் காங்கிரசை அழிக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் இன்று பெங்களூரிலும், டில்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டில்லியில் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா-ராகுல் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.